முன்போல் அடிக்கடி இங்கே எழுத முடிவதில்லை. வேலைகள் ஒரு பக்கம். ஆர்வக்குறைவு முக்கியம். எழுத்தைக் குறைத்து, கொஞ்சநாள் வெறுமனே படித்துக்கொண்டிருக்கலாம் என்று திட்டம். எனவே படிக்கிறேன்.

எழுதாதது பற்றிக் கடிதம் எழுதி விசாரிக்கும் நண்பர்கள் மன்னிக்கவும். திரும்பவும் வலையெழுத்தில் ஆர்வம் வரும்போது வருவேன். இந்தப் பதிவின் முக்கிய நோக்கம், இங்கே நான் எழுதிய பல பழைய கட்டுரைகளை இப்போது படித்துவிட்டு கமெண்ட் போடும் வாசகர்களைப் பற்றியது.

கடந்த 10ம் தேதி பரிசோதனையாக ஒரு பத்தி எழுதியபோது தளத்துக்கு வந்ததுடன் சரி. அதன்பின் இன்றுதான் எட்டிப்பார்க்கிறேன். பல பழைய கட்டுரைகளுக்கு வாசகர் கருத்துகள் வந்து காத்திருக்கின்றன. அவற்றை அனுமதிக்காமல் காலம் கடத்த நேர்ந்தது பற்றி வருந்துகிறேன். இப்போது அவை வெளியாகிவிட்டன.

அடுத்து திரும்ப எப்போது வருவேன் என்று தெரியவில்லை. எனவே கமெண்ட் எழுதுபவர்கள் அவை உடனுக்குடன் வெளியாகாதது பற்றி என்மீது வருத்தம் கொள்ள வேண்டாம். உடனே பதில் சொல்லியே தீரவேண்டுமென்றால் தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்புங்கள்.

சூரியக்கதிர் மாதமிருமுறை இதழில் விரைவில் ஒரு column தொடங்குகிறேன். அக்கட்டுரைகளை மட்டுமாவது இனி வலையில் வெளியிட முயற்சி செய்கிறேன்.

சில ட்விட்டர் நண்பர்களின் ஆலோசனைப்படி விண்டோஸ் லைவ் எடிட்டரைத் தரவிறக்கம் செய்து அதில் இருந்து இத்தளத்தில் நேரடியாக எழுத முடியுமா என்று பார்க்கிறேன்.

இது ஒரு பரிசோதனைப் பதிவு. குறிப்பிட்ட விஷயம் ஏதுமில்லை. சில தினங்களாகவே நீண்ட கட்டுரைகள் எழுத நேரமில்லாமல் இருக்கிறது. செம்மொழி மாநாடு தொடர்பாகவே சில கட்டுரைகள் எழுத நினைத்தும் முடியாமல் போய்விட்டது. அவசரத் தொடர்புக்கு ட்விட்டர் போதுமானதாக இருக்கிறது.

பெரியார் ஈ.வெ.ரா. தவிரவும் இந்நாள்களில் எழுதுவதைவிட நிறையப் படிக்கிறேன். பெரியார் திராவிடர் கழகத்தினர், பெரியாரின் குடியரசுக் கட்டுரைகளை மின் நூல்களாகத் தொகுத்து இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள். மிகப்பெரிய சேவை இது. தமிழ் சமூகம் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.

சும்மா படிக்கத் தொடங்கி, நிறுத்தவே முடியாத அளவுக்கு உள்ளே இழுத்துக்கொண்டோடுகிற எழுத்து. 1925ல் பெரியார் பயன்படுத்தியிருக்கும் தமிழைப் பார்க்க, அதிர்ச்சியும் வியப்பும் ஒருங்கே ஏற்படுகிறது. அந்நாளைய தமிழ் எழுத்தாளர்கள் யாருக்குமே எழுத்தில் அத்தனை எளிமை கிடையாது என்று அடித்துச் சொல்வேன். ஆத்திகராக இருந்த காலம் தொட்டு, காங்கிரஸ் தொண்டராக, காந்தி பக்தராக இருந்த நாள்தொட்டு அவர் எழுதிய கட்டுரைகளைக் கால வரிசையில் படித்துக்கொண்டிருக்கிறேன். முதல்பாகம் முடித்துவிட்டேன். இன்னும் ஒன்றிரண்டைப் படித்தபிறகு அது குறித்துச் சில கட்டுரைகள் எழுதவேண்டுமென்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம்.

பரிசோதனைப் பதிவுக்கு 1138 வார்த்தைகள் அதிகம். எனவே இத்துடன்.

ஆரவாரமான எதிர்ப்புகள், ஆயிரம் குற்றங்குறைகள், ஏற்பாட்டுக் குளறுபடிகள், கூட்டம், நெரிசல், தள்ளுமுள்ளு, குழப்படி இன்னபிற. இவ்வரிசையில் பட்டியலிட இன்னும் பல நூறு இருந்தாலும் செம்மொழி மாநாடு சிறப்பாகவே நடந்து முடிந்திருக்கிறது. கணக்கற்ற கோடிகள் செலவில் எதற்காக இப்படியொரு மாநாடு என்று ஆரம்பித்து, இதனால் சாதித்தது என்ன என்பது வரை ஒரு புத்தகமே வெளியிடக்கூடிய அளவுக்குக் கேள்விகள் இருந்தாலும், உலகம் முழுதும் தமிழ்ப்பக்கம் திரும்பிப் பார்க்கும்படியான ஒரு தருணத்தைக் கலைஞர் வழங்கியதை மறுக்க இயலாது. சந்தேகமில்லாமல் இது ஒரு தனிநபர் சாதனை.

மாநாட்டு தினங்கள் முழுதும் அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள், அவரவர் அடுத்த நிலை ஆள்கள், அடுத்ததற்கு அடுத்த நிலை, அதற்கடுத்த நிலை என்று ஆளும் வர்க்கம் முழுதும் கோவைக்குக் குடிபெயர்ந்துவிட்டது. எனவே தொண்டர்களும். அநேகமாகத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் திமுகவினர் வழக்கம்போல் வேன் வைத்துக்கொண்டு வந்துவிட்டார்கள். மேலிடத்து உத்தரவு போலிருக்கிறது. கட்சிக்கொடியை மட்டும் கவனமாகத் தவிர்த்துவிட்டார்கள்.

கோவை மக்களுக்கு மிரட்சி கலந்த திகைப்பு….

மீதிக் கட்டுரையை இட்லிவடையில் வாசிக்கவும். எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் அழைத்து, தனக்கு அதை அளித்துவிடும்படி வற்புறுத்தி வாங்கிக்கொண்டார். நண்பர் என்பதால் மறுக்க இயலவில்லை.

கட்டுரை இங்கே இருக்கிறது.

நவராத்திரி. கிடைத்த சான்ஸை விடாதே என்று உள்ளுணர்வு குரல் கொடுக்க, பச்சை கலர் பட்டுப்புடைவை அணிந்த குண்டு மாமி, பக்கத்து வீட்டு கொலு பொம்மைகளுக்கு எதிரே உட்கார்ந்து கர்ண கொடூரமாகப் பாட ஆரம்பிக்கிறார். ஆலாபனை, பல்லவி, அனு பல்லவி, சரணம், சிட்ட ஸ்வரம், கெட்ட ஸ்வரம் எல்லாம் போட்டு, தவறியும் சுதி சேராமல் அவர் பாடிக்கொண்டே போக, ஒரு மரியாதைக்குப் பாடுங்கள் என்று சொல்லிவிட்ட அந்தப் பாவப்பட்ட பக்கத்து வீட்டுப் பெண்மணி, என்ன செய்து உலக அழிவை நிறுத்தலாம் என்று யோசிக்கிறார்.

முப்பெரும் தேவியரை அவர் வணங்கி வேண்டியதும் புத்தியில் பல்பு எரிகிறது. அடடா, சுண்டல்!
உடனே எழுந்து சென்று நாலு கரண்டி சுண்டலை கப்பில் போட்டு எடுத்து வந்து மாமியின் எதிரே வைக்கிறார். சாப்ட்டுட்டுப் பாடுங்கோ மாமி.

அண்ட கோளங்களும் சுண்டலுக்குள் அடக்கம். நல்லதொரு சுண்டல் இன்றி நவராத்திரி நிறைவு பெறுவதில்லை. மகிஷனைக் கொல்லப்போகுமுன் தேவி, இருடா வரேன் என்று ஒரு க(ல்)ப் சோமபானம் அருந்திவிட்டுத்தான் போனாள் என்று தேவி பாகவதம் சொல்கிறது. தொட்டுக்கொள்ள அவசியம் சுண்டல்தான் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நவராத்திரிக்கு எப்படி அது வந்து சேர்ந்திருக்கும்?

அது நிற்க. நமது குண்டு மாமியின் சங்கீத சங்கடத்தை நிறுத்துவதற்குப் பக்கத்து வீட்டுப் பெண்மணி கொடுத்த சுண்டலுக்கு வருவோம்.

சுண்டலைப் பார்த்ததும் மாமி சட்டென்று பாட்டை நிறுத்திவிட்டு இரண்டு எடுத்து வாயில் போட ஆசை ஆசையாய்க் கை நீட்ட, சட்டென்று ஒரு கொண்டைக்கடலை எழுந்து, மாமியின் மூக்கில் ஒரு கும்மாங்குத்து விட்டது.

‘வாழ்நாளில் இதுவரை நூற்றுக்கணக்கான கிலோ சுண்டல் கபளீகரம் செய்த குண்டு மாமியே! உன்னை ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டுச் சாப்பிடக் கடவாய். கார்பான்ஸோ பீன், செஸி பீன், பெங்கால் க்ராம், காபூலி சானா, சனக பாப்பூ, ஷிம்ப்ரா, கடலே காலு இவற்றுக்கும் உனக்குத் தெரிந்த கொண்டைக்கடலைக்கும் என்ன சம்பந்தம்?’ Read the rest of this entry »

பிம்பங்கள் உடைவதைப்போல் வலி மிகுந்த சுவாரசியம் வாழ்வில் வேறில்லை. இன்றைய என் காலை பெங்குயின் எடிட்டர் டேவிட் டாவிதார் மீதான பாலியல் வழக்குச் செய்தியுடன் விடிந்தது. டாவிதார், என் மானசீகத்தில் என்னைக் கடந்த ஆறேழு ஆண்டுகளாக வழி நடத்திக்கொண்டிருந்தவர். அவர் பெங்குயின் இந்தியாவிலிருந்து மாற்றலாகி, பெங்குயின் கனடாவுக்குச் சென்று, அதன் தலைமை நிர்வாக அதிகாரியாகி எக்செல் ஷீட்டுகளுடன் வாழத்தொடங்கிய பிறகும் எனக்கு எடிட்டர்தான்.

பத்திரிகை உலகிலிருந்து பதிப்புத் துறைக்கு இடம் பெயர்ந்ததும், குறைந்தது இரண்டு மூன்று பதிப்பக எடிட்டர்களையாவது நான் கூர்மையாக கவனிக்கத் தொடங்கினேன். மேல் பார்வைக்கு, பத்திரிகை – புத்தக எடிட்டிங் ஒன்றே என்று தோன்றலாம். நிறைய வேறுபாடுகள் உண்டு. ஒரு பிரதியை அணுகும் விதத்திலிருந்தே அந்த வேறுபாடுகள் தொடங்கிவிடும். ஒரு புத்தகத்தின் தொடக்கம், எழுச்சி, அடங்கல் என்பது பத்திரிகைக் கட்டுரையின் தொடக்கம், எழுச்சி, அடங்கலிலிருந்து மாறுபட்டது.

இதனை மிக எளிமையாகச் சொல்லித்தரக்கூடியவை, பெங்குயின் இந்தியா கடந்த இருபதாண்டுகளில் வெளியிட்ட பல புத்தகங்கள். சரித்திரம், சமூகம் சார்ந்த புத்தகங்களை எடிட் செய்வதைக் காட்டிலும் இவ்வகையில் சமகால நிகழ்வுகளைப் புத்தகமாக்கும்போது ஓர் எடிட்டருக்கு எழக்கூடிய குழப்பங்கள் நிறைய உண்டு. இன்றைய அதிபரபரப்புகளுக்கு நாளை என்ன இடம் இருக்கும் என்று யூகிப்பது சவாலான விஷயம். பத்திரிகை என்பது ஒரு நாளில், ஒரு வாரத்தில், மிஞ்சினால் ஒரு மாத காலத்துக்குள் காலாவதியாகக் கூடியது. புத்தகம் அப்படியல்ல. இன்றைய பரபரப்பு, அதன் தீவிரம் குறையாது வெளிப்பட்டாக வேண்டிய அதே சமயம், எத்தனை ஆண்டுகள் கழித்து வாசிக்கும் வாசகனுக்கும் அது சரித்திரமாக உருமாறித் தென்படவேண்டும். பெங்குயின் இந்தியாவின் பல அரசியல் புத்தகங்கள் இதை வெகு அநாயாசமாகச் செய்திருக்கின்றன. உடனடியாக நினைவுக்கு வருபவை ஹுசைன் ஸெய்டியின் Black Friday – ஜூலியோ ரிபைரோவின் Bullet For Bullet [தன்வரலாறே என்றபோதும்.]

பெங்குயின் எடிட்டர்களுக்கு இந்த வித்தையைக் கற்றுக்கொடுத்தவர் டாவிதார். காட்சிகளை விவரிக்கும்போது சமகாலத்தன்மையை எழுத்தில் ஏற்றி, தகவல்களை, விவரங்களை, விமரிசனங்களை முன்வைக்கும்போது என்றைக்குமான மொழிக்குச் சட்டென்று மாறுகிற வித்தை அது. வாசகனுக்கு அந்த மாற்றம் தெரியாது. அவன் தன்னையறியாமல் பிரதியின் சாசுவதத்தன்மையை உணரத் தொடங்கியிருப்பான். இந்தக் காரணத்துக்காகவே நான் பெங்குயின் இந்தியாவின் அரசியல் புத்தகங்களைப் பெரும்பாலும் தவறவிடமாட்டேன். Read the rest of this entry »