பா. ராகவன்

Pa. Raghavan | Writerpara.com | Paper

மேற்கு வழியே கிழக்கு

சந்திரசேகரன் கிருஷ்ணனின் இந்தப் பதிவை வாசிக்கவும். கிழக்கு புத்தகங்களை சொந்தமாக வாங்கித்தான் படிக்க வேண்டுமென்பதில்லை. வாடகைக்கு எடுத்தும் வாசிக்கலாம் என்கிறார்.

நாநூறு சொற்களுக்குக் குறையாமல் ஒரு மதிப்புரை மட்டும் வேண்டுமென்கிறார். ‘வாடகைக்கு வாசிக்கலாம்’ என்று சொன்னாலும் வாடகைப் பணம் என்று ஏதும் வசூலிப்பதில்லை. இலவச நூலகம் மாதிரிதான்.

இப்போதைக்கு நாற்பது நூல்களை இந்தத் திட்டத்தின்கீழ் நீங்கள் இலவச்மாகப் படித்து, மதிப்புரை செய்து, நூலைத் திருப்பித் தரலாம். தந்தால், அடுத்த நூல்.

சென்னையில் வசிக்கும் வாசகர்களுக்கு மட்டுமே இப்போது இந்த வசதி உள்ளது என்கிறார் இவர். பயன்படுத்திப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

கலைஞரின் ‘ராங்’ செண்டிமெண்ட்

சீனிவாசா பள்ளி மாணவர்கள்

நேற்று காவிரிப் பூம்பட்டணம் என்கிற பூம்புகார் அருகே மேலையூர் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியின் ஆண்டுவிழாவுக்கு என்னை அழைத்திருந்தார்கள். காலைப் பொழுதில் கலந்துரையாடல். மாலை பரிசளிப்பு விழா என முழுநாள் நிகழ்ச்சி. என்னளவில் இது ஒரு புதிய அனுபவம். கூட்டங்களோ, கருத்தரங்குகளோ புதிதல்ல என்றாலும் ஒரு பள்ளிக்கூட ஆண்டு விழாவுக்குத் தலைமை தாங்குவது என்பது முதல். மூவாயிரத்தி ஐந்நூறு மாணவ மாணவிகளுக்கு எதிரே நின்றபோது பழைய ஞாபகங்களைத் தவிர்க்கவே முடியவில்லை. என்னால் பேசவே முடியாது போய்விடுமோ என்று பதற்றமாக இருந்தது.

என் பள்ளி, கல்லூரி நாள்களில் நான் ஒரு நல்ல மாணவனாக நடந்துகொண்டதில்லை. என்னை விரும்பக்கூடிய ஆசிரியர்கள் என்று யாருமிருந்த நினைவில்லை. சக மாணவர்கள் மத்தியிலும் எனக்கு அத்தனை நல்ல பெயர் கிடையாது. மத்தியத் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ஒரு சமயம், கல்லூரியின் பெயரைக் கெடுப்போர் பட்டியலில் எனக்கு அவசியம் முதலிடம் உண்டு என்று சொல்லியிருக்கிறார். அற்புதமான மாணவப்பருவம் முழுதும் ஊர் பொறுக்கி வீணாக்கியவன் நான். இது பற்றிய வருத்தம் எனக்குண்டு. ஆனால் அர்த்தமற்ற வருத்தம். பொறுக்கிய காலத்தில் முழுத் திருப்தி மற்றும் முழு மகிழ்ச்சியுடந்தான் அதனைச் செய்தேன் என்பதும் உடனே நினைவுக்கு வந்துவிடும். ஒரு மோசமான மாணவன் என்னும் சான்றிதழுடன் வெளியேறியவன் என்கிற நினைவு மட்டும் ஒருபோதும் எனக்கு மறப்பதில்லை. எனவே ஒரு பள்ளி விழாவுக்குத் தலைமை தாங்கச் செல்வது என்பது எனக்கு நியாயமான குற்ற உணர்ச்சியைத் தரக்கூடியதாகவே இருந்தது. Read the rest of this entry »

அண்ணன், அண்ணியை எப்படி அழைப்பார்?

நேற்று ஒரு வார இதழைப் புரட்டிக்கொண்டிருந்தேன். கேள்வி பதில் பகுதியில் வாசகரொருவர் கேட்டிருந்த கேள்வி: ‘அருமை அண்ணன் விஜய், அருமை அண்ணியாரை வீட்டில் எவ்வாறு அழைக்கிறார் என்று கண்டறிந்து சொல்ல முடியுமா?’

இதற்கு பதிலளிப்பவர், நடிகர் விஜய் குடும்பத்துக்கு நெருக்கமான இன்னொரு பத்திரிகையாளரிடம் இது பற்றி அக்கறையாக விசாரித்து, தகவல் பிழையில்லாமல் அருமையான பதில் ஒன்றைத் தந்திருந்தார்.

அது அவ்வளவு முக்கியமில்லை. என் வியப்பு, இந்த ஆர்வங்களின்மீது. விஜய் தன் மனைவியை எப்படி அழைப்பார் என்பதை அறிந்துகொண்டே தீரவேண்டும் என்கிற தீர்மானம் அவருக்கு எப்படி, எப்போது, எதனால் ஏற்பட்டிருக்கும்? அவர் தீவிர விஜய் ரசிகராக இருக்கலாம். அல்லது பிறந்தநாள் போன்ற தினங்களில் விஜய் மேற்கொள்ளும் ஒரு சில நற்பணிகளால் [தையல் மெஷின், ரத்த தானம் இன்னபிற.] பயன்பெற்றவராக இருக்கக்கூடும். அல்லது பூர்வ ஜென்மத் தொடர்பு ஏதேனும் இருக்கலாம். Read the rest of this entry »

மதனசுந்தர ஜவ்வாது பாகவதர்

 

அத்தியாவசியப பொருள்களின் விலைகள் நம்பமுடியாத உயரங்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில், சென்னையில் வசிப்பவர்கள் ஒரு மாறுதலுக்கு அண்ணாசாலை காதி கிராமோத்யக் பவனை முயற்சி செய்து பார்க்கலாம். வெளிச் சந்தையில் எந்தப் பொருள் என்ன விலையாக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். காதியில் அந்த விலையில் குறைந்தது பதினைந்து சதவீதமாவது குறைவாக உள்ளது. பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், கடுகு, சீரகம், மிளகு போன்ற பொருள்கள், குளிக்க, துவைக்க சோப்புகள், தைலங்கள், வாசனை திரவியங்கள், குழம்புப் பொடி, ரசப்பொடி, மிளகாய்ப்பொடி ரகங்கள், மூலிகை மருந்துகள், பினாயில் போன்ற பொருள்கள் – இதுதான் என்றில்லை. எதுவும் கிடைக்கிறது. கண்டிப்பாக, மிகத் தரமான பொருள்கள். சற்றும் சந்தேகமே வேண்டாம்.

அரசு இயக்கும் அமுதம் அங்காடிகளிலும் மளிகைப் பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது என்பது உண்மையே. ஆனால் பொருள்களின் தரத்தைப் பொருத்த அளவில் காதி எட்ட முடியாத உயரத்தில் உள்ளது என்பது அநேகமாகப் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் நான் காதிக்குச் செல்லும்போதெல்லாம் அநேகமாக அந்தப் பெரிய மாளிகையினுள் கொள்முதலுக்குச் செல்லும் ஒரே மனிதன் நாந்தான் என்னும் உணர்வு ஒவ்வொரு முறையும் ஏற்படுகிறது. மக்கள் பெரும்பாலும் அந்தப்பக்கம் எட்டிப்பார்ப்பதில்லை. காதி என்றால் கதர் ஜிப்பா மட்டும் என்னும் எண்ணம் எப்படியோ மனத்தில் படிந்துவிட்டிருக்கிறது. இது எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது. Read the rest of this entry »

காதலன், யுகேஜி-தேர்ட் க்ரூப்

'அப்பா, இந்த சீனிவாசன் ஏந்தான் இப்படி பண்றானோ தெரியல.’

‘என்னடா கண்ணு பண்றான்?’

‘இதுவரைக்கும் மூணுபேரை லவ் பண்ணிட்டான்.’

‘யார் யாரு?’

‘நித்யப்ரீதா, சம்யுக்தா, தீப்தி.’

‘ஓ! பெரிய பிரச்னைதான்.’

‘அவன் சம்யுக்தாவ லவ் பண்றது எனக்குப் பிடிக்கலை.’

‘ஏண்டா செல்லம்?’

‘அவ என் பெஸ்ட் ஃப்ரெண்ட்.’

‘ரொம்ப நியாயம்.’

‘எனக்குவேற லெட்டர் குடுக்கப்போறேன்னு சொல்றாம்பா.’

‘என்ன லெட்டர்?’

‘லவ் லெட்டர்தான்.’

‘அடேங்கப்பா’

நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோதே சமையல் அறையிலிருந்து என் மனைவியின் குரல் ஒரு வெட்டுக்கிளியின் வேகத்தில் படபடத்துக் கடந்தது. ‘குடுத்தான்னா பத்திரமா வாங்கி எடுத்துண்டு வா.’

‘எதுக்கு?’ என்றேன் சுவாரசியமாக. Read the rest of this entry »